Published : 29 Jul 2021 03:14 AM
Last Updated : 29 Jul 2021 03:14 AM

பெரம்பலூர் அருகே சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் : வனத் துறையினர் விசாரணை

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்திய சம்பவம் தொடர்பாக விசாரிக்க வனச்சரகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் அருகே கீழக்கணவாய் மலையடிவாரத்தில் தனியார் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான நிலங்களிலிருந்து 10-க்கும் மேற்பட்ட சந்தனமரங்களை சிலர் வெட்டி கடத்திச் சென்று விட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் கண்ணன் என்பவர் அண்மையில் புகார் மனு அளித்திருந்தார்.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் குகனேஸ் உத்தரவின் பேரில் வனச்சரகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு சந்தன மரங்கள் கடத்தியது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில், தனியாருக்கு சொந்தமான இடத்திலிருந்து 20 ஆண்டுக்கும் மேல் ஆன 3 சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளதும், முதிர்ச்சியடையாத 3 மரங்களை அறுத்துப் பார்த்துவிட்டு அப்படியே விட்டுச் சென்றதும் தெரியவந்துள்ளது. மேலும், வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் உள்ள சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x