Published : 29 Jul 2021 03:15 AM
Last Updated : 29 Jul 2021 03:15 AM

வாணியம்பாடியில் காரை வழிமறித்து - வழிப்பறி செய்த வழக்கில் 4 பேர் கைது :

வாணியம்பாடியில் காரை வழிமறித்து ரூ.11 லட்சம் பறித்துச்சென்ற வழக்கில் 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட் றாம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன்(45). இவர், அதே பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். ஞானசேகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் பேரணாம் பட்டு அடுத்த மொரசப்பல்லி என்ற இடத்தில் நடந்து வந்த சூதாட்ட கிளப்பில் பணம் வைத்து சூதாடிய பணம் ரூ.22 லட்சத்தை எடுத்துக் கொண்டு காரில் தனது நண்பர்கள் சிவக்குமார், பாலாஜி ஆகியோருடன் வாணியம்பாடி- வளையாம்பட்டு மேம்பாலம் வழியாக சென்றனர். அப்போது, அவர்களை பின் தொடர்ந்து மற்றொரு காரில் வந்த நபர்கள் ஞானசேகரனை வழிமறித்து அவரை தாக்கி காரில் இருந்த ரூ.11 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி தலைமையிலான காவல் துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, வாணியம்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்துச்சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட் டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் (33), சஞ்சய்(45), லட்சுமணன்(38), கிருஷ்ணமூர்த்தி(35) மற்றும் அவர்களது கூட்டாளிகள் தான் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது என தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, அலெக்ஸ் உள்ளிட்ட 4 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் பணம், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x