பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு :

பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், அதிமுக நகர செயல்வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. நகரச் செயலாளர் ஆர்.ஜி.குமார் வரவேற்றார். முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவா.ராஜமாணிக்கம் தலைமை வகித்தார்.

இதில், அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்எல்ஏ பங்கேற்று, பேசியது: திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை தடை செய்வோம் எனக் கூறியிருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்காமல், கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கும்படி கேட்டதற்கு மத்திய அமைச்சர் மறுத்துவிட்டார்.

திமுக அரசால் குறுவைக்கு தண்ணீர், விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவற்றை வழங்க முடியவில்லை. முந்தைய அதிமுக அரசு 32 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து, சாதனை படைத்தது. ஆனால், இன்னும் பருவம் தொடங்காத நிலையில்கூட, திமுக அரசால் நெல் கொள்முதல் செய்ய முடியவில்லை.

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்துவது போன்ற நடவடிக்கைகளால் அதிமுகவை யாரும் பயமுறுத்த முடியாது என்றார். கூட்டத்தில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மனோகரன், ஒன்றியச் செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in