ஒருதலைக் காதலால் விபரீதம் - பாலிடெக்னிக் மாணவியை கொன்ற உறவினர் கைது :

ஒருதலைக் காதலால் விபரீதம் -  பாலிடெக்னிக் மாணவியை கொன்ற உறவினர் கைது :
Updated on
1 min read

முத்துப்பேட்டையில் ஒருதலைக் காதலால், பாலிடெக்னிக் கல்லூரி மாணவியின் தலையில் அம்மிக் குழவியைப் போட்டு கொலை செய்த உறவினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் மகள் மவுனிகா(18). இவர், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே பேட்டையில் உள்ள தனது பாட்டி ராஜகுமாரி வீட்டில் தங்கி, தஞ்சையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவந்தார். ஜாம்புவானோடை பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலை பார்த்துவரும் உறவினரான பொதியப்பன் மகன் சிவசங்கரன்(28), மவுனிகாவை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்வதற்கு பெண் கேட்டபோது, மவுனிகாவின் பெற்றோர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த சிவசங்கரன் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் ராஜகுமாரியின் வீட்டுக்குச் சென்று, அங்கு தூங்கிக்கொண்டிருந்த மவுனிகாவின் தலையில் அம்மிக் குழவியைப் போட்டுவிட்டு, தப்பிச் சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மவுனிகாவை உறவினர்கள் மீட்டு, முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை மவுனிகா உயிரிழந்தார்.

இதற்கிடையே, தம்பிக்கோட்டை பகுதியில் பதுங்கியிருந்த சிவசங்கரனை நேற்று முன்தினம் இரவே பொதுமக்கள் பிடித்து, முத்துப்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in