Published : 26 Jul 2021 03:14 AM
Last Updated : 26 Jul 2021 03:14 AM
அமைச்சர் துரைமுருகன், வாணியம் பாடி பள்ளித் தாளாளர் ஆகியோரின் வீடுகளில் நடந்த திருட்டு முயற்சியில் வழக்கில் வாணியம்பாடியைச் சேர்ந்த இளைஞர் உட்பட 2 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான சொகுசு பண்ணை வீடு உள்ளது.
கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி துரைமுருகன் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு பணம், நகை ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்த ஹார்டிஸ்க் மட்டும் திருடிச்சென்றனர்.
துரைமுருகன் வீட்டில் ஏதும் கிடைக்காததால் அவரது வீட்டுக்கு அருகாமையில் உள்ள வாணியம் பாடியைச் சேர்ந்த பள்ளித் தாளாளர் செந்தில்குமார் என்பவரின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கும் பணம், நகை என எதுவுமே கிடைக்காததால், ‘வீட்டில் ஒரு 100 ரூபாய் கூட வைக்க மாட்டீங்களா’ என சுவரில் எழுதிவிட்டு கொள்ளையர் சென்ற சம்பவம் காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து ஏலகிரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து திருட்டு முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் நகர காவல் துறையினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த வாணியம் பாடியைச் சேர்ந்த நவீத்(28) என்ற இளைஞரை மடக்கி விசாரித்தனர். விசாரணையில், ஏலகிரி மலையில் உள்ள அமைச்சர் துரைமுருகன், பள்ளித் தாளாளர் செந்தில்குமார் ஆகியோரின் வீடுகளில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. மேலும், வாணியம்பாடியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் வசீம்அக்ரம், முஸ்லீம்பூர் பகுதியைச் சேர்ந்த அதாவூர்ரகுமான் ஆகியோரின் வீடுகளிலும் நகை, பணம் திருடிச்சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து, காவல் துறையினர் நவீத் மற்றும் ஆம்பூர் ரெட்டிதோப்பு பகுதியைச் சேர்ந்த 13 வயதுள்ள சிறுவன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களிடமிருந்து 80 பவுன் தங்க நகைகளை மீட்டு இருப்பதாகவும், இவர்களுடன் மேலும் சிலர் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் பெங்களூரு, ஆந்திராவில் பதுங்கியிருப்பதால் அவர்களை பிடிக்க தனிப்படை காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT