Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM

பண மோசடி வழக்கில் தலைமறைவான - நிதி நிறுவன அதிபர்கள் மீது பால்பண்ணை ஊழியர்கள் புகார் :

கும்பகோணம்

கும்பகோணம் நகர் காலனி தீட்சிதர் தோட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.கணேஷ், இவரது சகோதரர் எம்.ஆர்.சுவாமிநாதன். இவர்கள் நிதிநிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா- பைரோஜ்பானு தம்பதியர் தாங்கள் முதலீடு செய்த ரூ.15 கோடியை தராமல் ஏமாற்றிவிட்டதாக அளித்த புகாரின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகியோரை தேடிவருகின்றனர்.

இந்நிலையில், கொற்கை மற்றும் மருதாநல்லூரில் உள்ள இவர்களுக்கு சொந்தமான 3 பால் பண்ணைகளில் 20 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளனர். இதேபோல, தங்களுக்கும் பணப் பாக்கி உள்ளதாக பால்பண்ணைக்கு தீவனம் விநியோகம் செய்தவர்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகார்கள் அனைத்தும் நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரிக்கும் மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x