Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM

சிறுமியை பலாத்காரம் செய்த இருவர் போக்ஸோவில் கைது :

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இருவரை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், ‘கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் பாவக்கல் கிராமத்தைச் சேர்ந்த உறவினரான அஜித்குமார் (25) என்பவரை காதலித்து வந்தேன். அவர், கடந்த 5-ம் தேதி போன் மூலம் என்னை எங்கள் ஊர் அருகில் உள்ள ஏரிக்கு அழைத்தார். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறி என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவத்தின்போது அப்பகுதிக்கு வந்த பாப்பி ரெட்டிப்பட்டி வட்டம் கோபிச் செட்டிப்பாளையம் அஞ்சல் எல்லைக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விஜய் (26), தியாகு (36) ஆகிய இருவரும் அஜித்குமாரை மிரட்டி துரத்தி விட்டனர். பின்னர் விஜய் என்னை பலாத்காரம் செய்தார்.

அவருடன் இருந்த தியாகு என்பவர் இதை செல்போன் மூலம் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துக் கொண்டார். மேலும், சம்பவம் பற்றி யாரிடமும் கூறினால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டிச் சென்றனர். இந்நிலையில், சம்பவம் பற்றி தெரிந்து பெற்றோர் என்னிடம் விசாரித்தனர். இதனால் பயத்தில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றேன். என் தயார் என்னை காப்பாற்றினார். இதற்கெல்லாம் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) சரோஜா விசாரணை மேற்கொண்டார். புகார் உண்மை என விசாரணையில் தெரிய வந்த நிலையில் விஜய், தியாகு ஆகிய இருவரையும் போலீஸார் போக்ஸோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அஜித்குமாரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x