Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM

கிருஷ்ணகிரி ஆர்டிஓ இ-சேவை மையத்தில் அவதியுடன் காத்திருக்கும் மக்கள் :

கிருஷ்ணகிரி ஆர்டிஓ., அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையத்திற்கு விண்ணப்பிக்க வருபவர்கள் அவதியுடன் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் கீழ் தளத்தின் ஒரு பகுதியில், தமிழக அரசின் பொது இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இச்சேவை மையத்திற்கு சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் முதல் பட்டதாரி சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெற தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கவும், பிழை திருத்தம், பெயர் நீக்குதல் உள்ளிட்டவைக்காக அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர்.

சான்றிதழ்கள் விண்ணப்பிக்க வருபவர்கள் நீண்ட வரிசையில் மழை மற்றும் வெயில் காலங்களில் சிரமத்துடன் காத்திருக்க்க வேண்டிய நிலை உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையத்தில் சான்றிதழ்கள் பெற விண்ணப்பிக்க நீண்ட வரிசையில் நிற்கிறோம்.

அலுவலகத்தின் மேல் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேறும் தண்ணீர் கீழே இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க நிற்பவர்கள் மீது விழுகிறது. இதேபோல் கட்டிடத்தின் மேலே உள்ள சிலாப்களில் சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து விழும் நிலை உள்ளதால் அச்சத்துடன் நிற்கும் நிலை உள்ளது.

எனவே, பொதுமக்கள் நீண்ட நேரம் சிரமத்துடன் நிற்பதை தவிர்க்கும் வகையில் நிழற்கூடம் அமைக்க வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள சிலாப்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியவர்கள், பெண்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x