Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM

குமரியில் மீண்டும் கனமழை :

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

இம்மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை காலத்தில் கனமழை பெய்ததால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. கன்னிப்பூ சாகுபடி பணிகள் 6,500 ஹெக்டேர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில், கடந்த இரு வாரங்களாக மழை இல்லை. வெயில் கடுமையாக இருந்தது. தற்போது இரு நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவில் தொடங்கிய மழை நேற்று மதியம் வரை நீடித்தது. அதிகபட்சமாக மயிலாடியில் 24 மிமீ மழை பெய்துள்ளது. நாகர்கோவிலில் 22 மிமீ, கொட்டாரத்தில் 15, சுருளகோட்டில் 20, பெருஞ்சாணியில் 11, பாலமோரில் 23, மாம்பழத்துறையாறில் 12, ஆரல்வாய்மொழியில் 10, கோழிப்போர்விளையில் 11, முள்ளங்கினாவிளையில் 13, ஆனைக்கிடங்கில் 12 மிமீ மழை பெய்திருந்தது.

பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 511 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் நீர்மட்டம் 44.56 அடியாக உள்ள நிலையில், 506 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. பெருஞ்சாணி அணைக்கு 221 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், நீர்மட்டம் 72.65 அடியாக உள்ளது. அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு ஒன்றில் 16.70 அடி, சிற்றாறு இரண்டில் 16.80 அடி தண்ணீர் உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 22 அடியாக உள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் ஏற்கெனவே வெள்ள அபாய நிலையில் இருப்பதால், பொதுப்பணித்துறை நீர்ஆதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x