Published : 24 Jul 2021 03:14 AM
Last Updated : 24 Jul 2021 03:14 AM

கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட - கும்பகோணம் நிதி நிறுவன அதிபர்களின் சொத்துகளை முடக்க வலியுறுத்தல் :

பண மோசடியில் ஈடுபட்ட கும்பகோணம் நிதி நிறுவன அதிபர்களின் சொத்துகள், வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தம்பதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

கும்பகோணம், நகர் காலனி தீட்சிதர் தோட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.கணேஷ். பாஜகவின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட வர்த்தகப் பிரிவு தலைவராக இருந்தார். இவரது சகோதரர் எம்.ஆர்.சுவாமிநாதன். இவர்கள் இருவரும் தங்களது வீட்டிலேயே நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். மேலும் பால்பண்ணை, ஹெலிகாப்டர் வாடகைக்கு விடுதல் ஆகிய தொழில்களையும் செய்து வந்தனர்.

இவர்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த ரூ.15 கோடியை திரும்பத் தரவில்லை எனக் கூறி, கும்பகோணம் நகர் காலனியைச் சேர்ந்த ஜபருல்லா - பைரோஜ்பானு தம்பதியினர் தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இப்புகாரின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர். மேலும் அவர்களது 12 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், கும்பகோணத்தில் ஜபருல்லா - பைரோஜ்பானு தம்பதியினர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் துபாய் நாட்டில் விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறோம். எங்களது மகன் மாற்றுத் திறனாளி. அவரது பெயரில் நலத் திட்டங்கள் செய்ய வேண்டும். பெரிய அளவில் மதரஸா கட்ட வேண்டும் என எண்ணியிருந்தோம்.

இதுகுறித்து அறிந்த கணேஷ், சுவாமிநாதன் ஆகியோர் எங்களைத் தொடர்பு கொண்டு, தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் பணம் இரட்டிப்பாக வழங்கப்படும் எனக் கூறினர். அதை நம்பி நாங்கள் ரூ.15 கோடியை முதலீடு செய்தோம். ஆனால், தற்போது முதலீடு செய்த பணத்தை கேட்டால் தர மறுப்பதோடு, தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி மிரட்டினர். இதையடுத்து பிரதமர் மோடிக்கு மின்னஞ்சலிலும், தமிழக முதல்வர், டிஜிபி அலுவலகம் மற்றும் தஞ்சாவூர் எஸ்பியிடம் நேரிலும் புகார் அளித்துள்ளோம்.

கும்பகோணத்தில் பொதுமக்களிடம் சுருட்டிய பணத்தை கணேஷ் சகோதரர்கள் வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ளனர். எனவே, இவர்களது வங்கிக் கணக்குகள், சொத்துகளை முழுமையாக முடக்கி வைக்க வேண்டும். இவர்கள் இருவரும் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதால் அதுகுறித்தும் போலீஸார் கண்காணிக்க வேண்டும்.

பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் ஏமாற்றியுள்ளதால், சிபிஐ விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்து சொத்துகளை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x