Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM

கல்குவாரிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் : கூலிப்பாளையம், இச்சிப்பட்டி கிராம மக்கள் அச்சம்

குடியிருக்கும் வீடுகளுக்கும், உயிருக்கும் கல்குவாரிகளால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக, திருப்பூர் மாவட்டம் கூலிப்பாளைம், இச்சிப்பட்டி ஆகிய கிராம மக்கள் அச்சம் தெரிவித்து, ஆட்சியரிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் கூலிப்பாளையம் ஆர்.எஸ். பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், "எங்கள் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு, தனியார் ஒருவர் கல்குவாரி தொழில் செய்து வந்தார். அங்கு வெடி வைத்து பாறைகளை உடைப்பதால் பாதிக்கப்பட்டோம். மேலும், காற்று மாசால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் சூழலுக்கு பலர் தள்ளப்பட்டுள்ளோம். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

பல்லடம் வட்டம் இச்சிப்பட்டி பொதுமக்கள் அளித்த மனுவில், "எங்கள் ஊருக்கு அருகே மூன்று கல்குவாரிகள் உள்ளன. இதில், வெடி வைப்பதால் குடியிருக்கும் வீடுகளுக்கும், பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஓய்வூதியக் கணக்கு முடக்கம்

அவிநாசி கைகாட்டிப்புதூரை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ப.லட்சுமி (70), நேற்று அளித்த மனுவில், "அவிநாசி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்து, 2010-ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். அவிநாசி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில், கணக்கு வைத்து அதில் ஓய்வூதியம் பெற்று வந்தேன். இந்நிலையில், எனது கணக்குக்கு அறிமுகம் இல்லாத வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 50 லட்சம் வந்துள்ளதாக குறுந்தகவல் வந்தது. ஆனால், வங்கிக் கணக்கில் தொகை இல்லை.

இதையடுத்து வங்கி கிளையிடம் கேட்டபோது, அவர்களிடம் இருந்து உரிய பதில் இல்லை. இந்நிலையில், ஓய்வூதியப் பணம் எடுக்க இயலாமல் செய்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தேன். மூன்று மாதங்களாக ஓய்வூதிய வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணை நடத்தி வங்கிக் கணக்கை இயக்கவும், ஓய்வூதியப் பலன் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இழப்பீடு வேண்டும்

பல்லடம் அருகே தொட்டம்பட்டி பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் அளித்த மனுவில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பெருந்துறையில் லாரி நிறுவனத்தில் கணவர் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 20-ம் தேதி வேலைக்கு சென்றார். பின்னர், பணிக்காக லாரி ஓட்டிச் சென்றவர் ஜெய்ப்பூரில் நெஞ்சு வலியால் உயிரிழந்ததாக சடலத்தை மட்டும் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து எந்தவித உதவியும் கிடைக்கவில்லை. வேலை பார்த்த சம்பளமும் கொடுக்கவில்லை. இழப்பீடு தொகையும் வழங்கவில்லை. ஏழ்மை நிலையில் இருப்பதால், இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x