

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95 அடியை கடந்து, தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணையுமான பவானிசாகர் அணையில், 105 அடி வரை நீரினைத் தேக்கி வைக்க முடியும். நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது.
அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து, அவ்வப்போது தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 95.65 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1086 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்துக்காக 500 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக 100 கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது. காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி பாசனத்துக்கு அடுத்தடுத்து நீர் திறக்கப்படவுள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.