Published : 18 Jul 2021 03:15 AM
Last Updated : 18 Jul 2021 03:15 AM

காங்கயம், தாராபுரம் எம்எல்ஏ அலுவலகங்கள் திறப்பு :

திமுக அமைச்சரவையில் திருப்பூர் மாவட்டத்துக்கு காங்கயம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.பெ.சாமிநாதன், தாராபுரம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.கயல்விழி செல்வராஜ் ஆகிய இருவர் அமைச்சர்களாக உள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கான எம்.எல்.ஏ. அலுவலகங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

காங்கயம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு செய்தித் துறை அமைச்சராக உள்ள மு.பெ.சாமிநாதன், தற்போது வெள்ளகோவிலில் எம்.எல்.ஏ. அலுவலகம் திறந்துள்ளார். காங்கயம் காவல் நிலையம் எதிரே எம்.எல்.ஏ. அலுவலகம் இருந்த நிலையில், ஏற்கெனவே அமைச்சராக இருந்தபோது பயன்படுத்தி வந்த அலுவலகத்தை மு.பெ.சாமிநாதன் தற்போது திறந்துள்ளார்.

அதேபோல, தாராபுரம் கண்ணன் நகரில் கடந்த 10 ஆண்டுகளாக பெரிதாக பயன்படுத்தாமல் இருந்து வந்த எம்.எல்.ஏ. அலுவலகத்தை, தற்போதைய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் திறந்துள்ளார்.

இதுதொடர்பாக இரண்டு தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, "தாராபுரம் கண்ணன் நகரில் அமைந்துள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் தெரு மூலையில் அமர்ந்திருப்பதால், இதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி, திமுக கூட்டணியில் கடந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிமுத்து ஆகியோர் பெரிதாக பயன்படுத்தவில்லை. ஆனால், தற்போது அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார் என கருதுகிறோம். தற்போது, அங்குள்ள அலுவலகத்தை அவர் பயன்படுத்த தொடங்கியுள்ளார். ஆனால், தொடர்ந்து பயன்படுத்துவாரா என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.

அதேபோல, காங்கயம் தொகுதியில் வெள்ளகோவில் மையப் பகுதியாக இருப்பதால் அங்கு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, காங்கயத்தில் இருந்த எம்.எல்.ஏ. அலுவலகமும் கடந்த முறை பயன்படுத்தப்படாத நிலையில், தற்போது வெள்ளகோவிலில் எம்.எல்.ஏ. அலுவலகம் திறந்திருப்பது தொகுதி மக்களிடையை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இரண்டு அலுவலகங்களும் முழுவீச்சில் பயன்பாட்டுக்கு வந்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சியே" என்றனர்.

பட விளக்கம்

வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை நேற்று முன்தினம் திறந்துவைத்த செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x