Published : 17 Jul 2021 03:13 AM
Last Updated : 17 Jul 2021 03:13 AM

‘குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை’ :

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "18 வயது நிறைவடையாத பெண்ணுக்கோ, 21 வயது நிறைவடையாத ஆணுக்கோ திருமணம் செய்வது குழந்தைத் திருமணம்.குழந்தைத் திருமணம் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறி குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்டால் திருமணம் செய்யும் மணமகன், மணமகனின் பெற்றோர், மணமகளின் பெற்றோர், திருமணம் நடத்திவைப்போர், பங்கேற்றோர் என அனைவர் மீதும் குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின்படி, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளிக்கும் நபர்களுக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகளுக்கு குறையாமலும், அதிகபட்சமாக மரண தண்டனை, அபராதமும் விதிக்கப்படும். 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தொழிலாளர்களாக நியமிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கேரட் கழுவுதல், பாக்கு, மிளகு பறித்தல், தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்துதல், ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தினால், அப்பணிகளில் அமா்த்தியவர் மீது குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம், இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் கடும் தண்டனைகள், அபராதம் விதிக்கப்படும். இதேபோல, கருவில்இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என அறிந்துகொண்டு, அதை வெளியிடும் மருத்துவமனை மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முறையான தத்து எடுப்பதற்காக பதிவு செய்ய, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளவேண்டும். அதேபோல, 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புஅலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 90474-58219, 98433-47417 ஆகிய அலைபேசி எண்கள், 1098 என்ற சைல்டு லைன், 1800 425 0262 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x