Last Updated : 15 Jul, 2021 03:15 AM

 

Published : 15 Jul 2021 03:15 AM
Last Updated : 15 Jul 2021 03:15 AM

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட - கிராம வரையறை எல்லை கற்கள் சீரமைக்கப்படுமா? :

வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் வயல்வெளியில் கிராம வருவாய் எல்லைகளை குறிக்கும் விதமாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டு, சேதமடைந்துள்ள எல்லைக் கற்கள்.

தஞ்சாவூர்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிராமங்களின் எல்லைகள் வரை யறை செய்யப்பட்டபோது, அந்த எல்லைகளை குறிக்கும் விதமாக பிரம்மாண்டமாக செங்கற்களை கொண்டு கட்டப்பட்ட எல்லைக் கற்கள் பல இடங்களில் சேதமடைந் தும், இடிந்தும் காணப்படுகின்றன.

இதுகுறித்து வருங்கால தலை முறையினர் அறிந்துகொள்ள எஞ்சியுள்ள கற்களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத் தில் தமிழகத்தில் கிராமங்களில் உள்ள நிலங்களை அளவீடு செய்து, அதற்காக சர்வே எண் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, ஒவ்வொரு கிராமத்தின் எல்லைகளிலும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில், செங்கற்களை கொண்டு 8 அடி உயரத்தில் கிராம எல்லைகளை குறிக்கும் வகையில் பிரம்மாண்டமான எல்லைக் கற்கள் அமைக்கப்பட்டன.

அதேபோல, கிராமங்களின் உள் பகுதிகளில் பல சர்வே எண்கள் இருக்கும். ஒவ்வொரு சர்வே எண்களுக்கும் கருங்கற்களால் அம்புக் குறியீடு பொறிக்கப்பட்டு, சர்வே எல்லைக் கற்கள் அமைக் கப்பட்டுள்ளன.

காலப்போக்கில் கிராம எல்லைகளை குறிக்கும் இந்த பிரம்மாண்ட எல்லைக் கற்கள் சேத மைடந்துவிட்டன. தற்போது சில பகுதிகளில் மட்டுமே காணப்படும் சேதமடைந்த நிலையில் உள்ள எல்லைக் கற்களை சீரமைத்து, முற்றிலும் சேதமடைந்த எல்லைக் கற்களுக்கு பதில் புதிய எல்லைக் கற்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் மருதையன் கூறும்போது, “ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிராம கணக்கு கள் பதிவேடுகளில் பதிவு செய்யப் பட்டன. அப்போது, ஒவ்வொரு கிராமத்திலும் மனைப் பகுதிகள், விவசாயப் பகுதிகள் என பிரிக் கப்பட்டன.

இதில் விவசாய நிலங்கள் அடங்கிய பகுதிகள் கிராமத்தின் அடிப்படையில் சர்வே எண்கள், புல எண்கள் வழங்கி பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டன. அப்போது, இதற்காக கிராம எல்லைக் கற்கள் அமைக்கப்பட்டன. கிராமத்தின் எல்லைகளில் மிக முக்கியமான இடங்களில் இந்த எல்லைக் கற்கள் அமைந்திருக்கும். ஆனால், காலப்போக்கில் இந்த எல்லைக் கற்கள் சேதமடைந்துள்ளன.

எல்லைக் கற்கள் குறித்து வருங்கால தலைமுறையினரும் தெரிந்துகொள்ளும் விதமாக, சேதமடைந்துள்ள கிராம எல்லைக் கற்களை வருவாய்த் துறையினர் சீரமைக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து மானாவாரி பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் வேங்கராயன்குடிக்காடு து.வைத்தி லிங்கம் கூறும்போது, “தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் இந்த கிராம எல்லைக் கற்கள் இருந்தன. தற்போது, வேங்கராயன்குடிக்காடு பகுதியில் நாஞ்சிக்கோட்டை-கொ.வல்லுண்டாம்பட்டு கிராம வருவாய் எல்லைகளை பிரிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்த ஏராளமான கற்களில் ஒரு சில இடங்களில் மட்டுமே எல்லைக் கற்கள் எஞ்சியுள்ளன. அவையும் சேதமடைந்த நிலையில் உள்ளன. இவற்றை மீண்டும் சீரமைத்து அமைக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x