Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM
ரூ.167 கோடி மதிப்பிலான பெரியார் பேருந்து நிலையக் கட்டுமானப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார். பேருந்து நிலையத்தை விரைவில் திறக்கப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையத்தை மேம்படுத்துதல், பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் பல்லடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைத்தல், வைகை ஆற்றங்கரையை மேம்படுத்துதல், புராதனச் சின்னங்களை இணைக்கும் புராதன வழித்தடங்கள் அமைத்தல், புதுமண்டபத்தில் உள்ள கடைகளை குன்னத்தூர் சத்திரத்தில் மாற்றி அமைத்தல், மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகள் மற்றும் மீனாட்சி பூங்கா, ஜான்சிராணி பூங்காவை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கின்றன.
தற்போது இதில் அத்தியாவசியமாக விரைவாக முடிக்கக்கூடிய ரூ.167.06 கோடி மதிப்பிலான பெரியார் பேருந்து நிலையக் கட்டுமானப்பணிகளை மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் ஆய்வு செய்தார். பெரியார் பேருந்து நிலையத்தில் நகரப்பேருந்துகள் வந்து செல்லும் மற்றும் நிறுத்துவதற்கான இடங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பேருந்து நிலையத்தில் மழைக் காலங்களில் மழைநீர் சீராகச் செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணியையும், பேருந்து நிலையத்தில் தரைத்தளத்தில் தண்ணீர் தேங்காதவாறு மழைநீர் வடிகாலுக்குக் கொண்டு செல்லுமாறு ஆய்வின்போது அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பஸ் நிலையத்தை விரைவில் திறக்கும் வகையில் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT