Published : 11 Jul 2021 03:13 AM
Last Updated : 11 Jul 2021 03:13 AM

போலி கால்நடை மருத்துவர்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் : செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் போலி கால்நடை மருத்துவர்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கால்நடை மருத்துவ பேரவைஎனப்படும் இந்திய வெட்னரி கவுன்சிலில் பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்கள் மட்டுமேகால்நடைகளுக்கு சிகிச்சைஅளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள் ளது. அவர்கள் அல்லாத போலி கால்நடை மருத்துவர்கள் சிகிச்சைஅளிப்பதும், அவர்கள் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதும் சட்டப்படி குற்றமாகும். போலி நபர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் நிரந்தர உடல் குறைபாடுகளால் ஏற்படும் இழப்புகளுக்கு காப்பீட்டு நிறுவனம் மூலம் இழப்பீடு பெற முடியாது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சில பகுதிகளில் செயற்கை முறை இனவிருத்தி பணிக்காக தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை மூலம் பயிற்சி பெற்ற செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் சினை ஊசி போட மட்டுமே அனுமதிக்கப்பட்டவர்கள். அவர்களில் எவரேனும் கால்நடை மருத்துவர் என்று கூறி போலியாக கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது முற்றிலும் தவறான செயலாகும். கால்நடைகளுக்கு சிகிச்சை பெற அரசிதழில் பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்களை மட்டுமே அணுக வேண்டும்.

எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் இது போன்று போலி கால்நடை மருத்துவர்கள் இருப்பின், அவர்கள் குறித்த தகவலை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநரிடமோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திலோ புகார் அளிக்கலாம். போலி கால்நடை மருத்துவர்கள் கண்ட றியப்பட்டால், முதல்முறை ரூ.1,000 அபராதமும், 2-ம் முறை ரூ.1,000 அபராதம் மற்றும் ஆறு மாதம் கடுங்காவல் சிறை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.

எனவே, கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு, அரசிதழில் பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்கள் மூலம் மட்டுமே சிகிச்சை பெறவேண்டும். போலி மருத்துவர்களை அடையாளம் கண்டு கால்நடைகளின் நலம் காக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x