Published : 09 Jul 2021 03:14 AM
Last Updated : 09 Jul 2021 03:14 AM

ஊரடங்கால் மாசில்லா மாவட்டமாக மாறிய நீலகிரி : மாசின் அளவு குறைந்து காற்றின் தரம் உயர்வு

உதகை

நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றுலா தலமாக அமைந்துள்ளதால் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் தினமும் வந்து செல்வர். ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் இரண்டாம் பருவ காலமானசெப்டம்பர், அக்டோபர் மற்றும் புத்தாண்டு காலங்களில் அதிகளவில் வருகின்றனர். ஆயிரக்கணக்கான வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால், மாசின் அளவும் அதிகரிக்கும்.

இந்நிலையில், கரோனா பரவல்காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் அனைத்து சுற்றுலாத் தலங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன. உதகை மட்டுமின்றி குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய நகர்ப்புறங்களிலும் அதிக அளவிலான வாகனங்கள் வராததால் விபத்துகள் குறைந்துள்ளதோடு, மாசு கட்டுப்படுத்தப்பட்டு தூய்மையான மாவட்டமாக நீலகிரி மாறியுள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, நீலகிரியின் பழைய இயற்கைஅழகை காண முடிவதாக உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இந்த தகவல், மாசு கட்டுப்பாட்டுவாரியம் மூலம் உதகை ஆவின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காற்றின் தர தொடர் கண்காணிப்பு நிலையம் மூலம் உறுதியாகியுள்ளது. இந்த நிலையம், கடந்த ஆகஸ்ட்மாதம் ரூ.1.5 கோடி செலவில் அமைக்கப்பட்டது. இங்கு காற்றின்தரம், மாசு அளவு கணக்கிடப்படுகிறது. பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், எல்இடி மின்னணு தகவல் பலகையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் பி.எஸ்.லிவிங்ஸ்டன் கூறும்போது, "தமிழ்நாட்டில் 35 காற்றின் தர தொடர் கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ரூ.1.5 கோடி செலவில் காற்றின் தர தொடர் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த நிலையத்தில் தூசு, 10 மைக்ரான், 2.5 மைக்ரான், சல்பர்டை ஆக்சைட், கார்பன் மோனாக்சைட், அமோனியா, நைட்ரஜன் ஆக்சைட்கள், ஓசோன், சைலின், பென்சின், டொலுவின் ஆகிய 11 அளவுருக்கள் கண்காணிக்கப்படுகின்றன. காற்று உறிஞ்சப்பட்டு, மாதிரிகள் ஆய்வு செய்த தகவல்கள், மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகங்களுக்கு அனுப்பப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் காற்றின் தரம் சிறப்பாக உள்ளது. காற்றின் தரக்குறியீடு 35 புள்ளிகளாக பதிவாகிவருகிறது. 50 புள்ளிகளுக்கு கீழ் இருந்தால் காற்று தரமானது. ஊரடங்கில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது. ஊரடங்கு விலக்கப்பட்டால், மாசு சிறிது கூடும். இந்தகண்காணிப்பு நிலையத்தில் சேகரிக்கப்படும் தரவுகள், காற்றின் தரத்தைஆய்வு செய்ய பயன்படும். மேலும், எந்தெந்த செயல்பாடுகளை அனுமதிக்கலாம் என திட்டமிடஉதவும். ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x