

பழங்குடியின மக்களின் போராளி ஸ்டான் சுவாமி மீது பொய் வழக்கை தொடுத்தவர்கள், மனித தன்மையற்ற முறையில் அவரை நடத்தியவர்கள், இதன் மூலம் அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பீமா கோரேகான் வழக்கிலும் இதர அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்குகளிலும் அடக்குமுறை சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பாளர் மாதவன் தலைமை தாங்கினார். திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளபுகேழந்தி, நகர செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், நகர செயலாளர் அமர்நாத், காங்கிரஸ் மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் குளோப், தி.க. மாவட்ட செயலாளர் சிவகுமார் விடுதலை வேங்கை வெங்கடேசன் , மதிமுக நகர செயலாளர் ஐயப்பன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.