

நுகர்வோர் அமைப்பிடம் இருந்து பெறப்பெற்ற புகார் அடிப்படையில் தூத்துக்குடி மாநகர எல்லை மற்றும் பழைய காயல் பகுதிகளில் உள்ள உப்பு தயாரிப்பு நிறுவனங்களில் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்திமுருகன், காளிமுத்து ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி பெரிய கடைவீதியில் உள்ள ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு செய்த போது, வேறு பிராண்ட்களின் பெயருடன் பேக்கிங் பவுச்சுகள் மற்றும் அந்நிறுவனத்துக்குரிய பேக்கிங் பவுச்சுகளில் முழுமையான தயாரிப்பு முகவரி இன்றியும், உணவு பாதுகாப்பு உரிம எண் அச்சிடாமலும் சுமார் 622 கிலோ பேக்கிங் பவுச்கள் இருந்தன. சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள அவை பறிமுதல் செய்யப்பட்டன.
அங்கு நடத்திய விசாரணையின் போது கிடைத்த தகவலின் பேரில் பழையகாயல் பகுதியில் உள்ள உப்பு தயாரிப்பு ஆலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு முழுமையான முகவரியில்லாமல் முறைகேடாக தயாரிக்கப்பட்ட சுமார் 1,350 கிலோ உப்பு பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதிலிருந்து மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உப்பு தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உப்பு பாக்கெட்டுகளில் உரிய லேபிளில் முகவரி உள்ளிட்ட விவரங்களை அச்சிட வேண்டும். வரையறுக்கப்பட்ட அளவு அயோடின் சேர்த்து உப்பை பொட்டலமிட வேண்டும். உணவு பாதுகாப்பு உரிமம் எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்தார்.