Published : 29 Jun 2021 06:13 AM
Last Updated : 29 Jun 2021 06:13 AM

தடுப்பூசிக்கு டோக்கன் பெற இணையதள சேவை பாதிப்பு :

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடுவதற்கு மக்கள் மத்தியில் கடந்த ஒரு மாதமாக ஆர்வம் அதிகரித்துள்ளது. தடுப்பூசி மையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் இதுவரை 3.5 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பல மணி நேரமாக மக்கள் காத்து நின்று ஏமாற்றம் அடைவதை தவிர்க்கவும், மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் நடவடிக்கை மேற்கொண்டார். தடுப்பூசி செலுத்துவதற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து டோக்கன் பெறும் முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. காலை 6 மணி முதல் 10 மணி வரை பொதுமக்கள் ஆன்லைனில் டோக்கன் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், டோக்கன் பெறும் இணையதள சேவை முடங்கியதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

குமரியில் நேற்று 51 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. நாகர்கோவில் இந்து கல்லூரி, டதி பள்ளி, அலோசியஸ் பள்ளி போன்ற மையங்களில் ஆன்லைன் டோக்கன் அவசியம் என சுகாதாரத் துறையினர் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

தடுப்பூசி செலுத்த முடியாமல் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பினர். வேறு சில முகாம்களில் நேரடியாக டோக்கன் கொடுத்து தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைனில் தடுப்பூசிக்கான டோக்கன் பெறும் செயல்பாட்டை எளிமைப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x