அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களை - தனியார் நிறுவனத்துக்கு மாற்றினால் கடும் நடவடிக்கை : ராமநாதபுரம் ஆட்சியர் எச்சரிக்கை

அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களை -  தனியார் நிறுவனத்துக்கு மாற்றினால் கடும் நடவடிக்கை :  ராமநாதபுரம் ஆட்சியர் எச்சரிக்கை
Updated on
1 min read

அரசு கேபிள் டிவி சந்தாதாரா்கள் விருப்பமில்லாமல் தனியார் கேபிள் செட் டாப் பாக்ஸ்களை வழங்கும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் சந்தாதாரர்களிடம் ரூ.140 மற்றும் ஜி.எஸ்.டி 18 சதவீதம் என்ற கட்டணத்தில் 200-க்கும் மேற்பட்ட சேனல்களை ஒளிபரப்பி வருகிறது. உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம், அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. சந்தாதாரர்கள் செட்டாப் பாக்ஸ்கள் பழுதடைந்தாலோ, மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் துண்டிக்கப் பட்டாலோ, சந்தாதாரர்கள் குடி பெயர்ந்து வேறு இடத்துக்குச் சென்றாலோ, செட்டாப் பாக்ஸ் மற்றும் ‘ரிமோட், அடாப்டர்’ ஆகியவற்றை அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

சில கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சந்தாதாரர்களின் விருப்பம் இல்லாமல், தங்களது சுய லாபத்துக்காக தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து அரசு செட்டாப் பாக்ஸ்களை மாற்றி னாலோ அல்லது அரசு சிக்னல் வராது என தவறான தகவலை தெரிவித்து, சந்தாதாரர்களை தனியார் நிறுவனங்களுக்கு மாற்ற முயன்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய செயலில் ஈடுபடும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது 04567 - 220024,1800 425 2911 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம். அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் ஆபரேட்டர்கள் மீதும், அரசு செட்டாப் பாக்ஸ்களை மூன்று மாதங்களுக்கு மேலாக செயலாக்கம் செய்யாமல் இருக்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in