Published : 23 Jun 2021 03:12 AM
Last Updated : 23 Jun 2021 03:12 AM

திருப்பூர், உதகையில் போலீஸார் வாகன தணிக்கை : மது கடத்தல், சாராயம் விற்றதாக 6 பேர் கைது

சேவூர் அருகே போத்தம்பாளை யம் பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக, போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவிநாசி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்வெங்கடேஷ்வரி தலைமையிலான போலீஸார் சாவக்கட்டுப்பாளையம் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில்வந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், அவர் புஞ்சை தாமரைக்குளம் ரங்கசாமி மகன் அருள்குமார்(30) என்பதும், ஒரு லிட்டர் சாராயத்தை வைத்திருந்ததும் தெரியவந்தது.மேலும் போத்தம்பாளையம் மணியின் மகன் மூர்த்தியிடம் (45), சாராயத்தை வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து மூர்த்தியின் வீட்டில் சோதனை செய்து, 3 லிட்டர் சாராயம், 80 லிட்டர் சாராய ஊறலை போலீஸார்கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்து, மூர்த்தி மற்றும் அருள்குமார்ஆகியோரை கைது செய்தனர்.

உதகை

உதகை டிஎஸ்பி மகேஷ்வரன்தலைமையிலான தனிப்படை போலீஸார், உதகை - கூடலூர் தேசியநெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பிரஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டி வந்த சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், கேரள மாநில மதுபானம் சுமார் 40 லிட்டர் இருந்தது, தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து, வாகன ஓட்டுநர் விஜய் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, கூடலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கூடலூர் ஆய்வாளர் அருள் தலைமையிலான தனிப்படை போலீஸார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக இருசக்கரவாகனத்தில் வந்த இரண்டு பேரை நிறுத்தி சோதனை செய்ததில், கர்நாடக மாநில மதுபான வகைகளை அவர்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், கூடலூர் இரண்டாம் மைல் பகுதியில் விமல் என்பவரிடம் மதுபான வகைகளை வாங்கி வந்ததாக தெரிவித்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் ஒரு வீட்டின் பின்புறத்தில் இருந்துசுமார் 176 பாட்டில் மதுபானங்களை போலீஸார் கைப்பற்றினர். இதுதொடர்பாக கூடலூர் இரண்டாவது மைல் பகுதியை சேர்ந்த விமல்நாதன் (38), அருண்குமார் (36) மற்றும் நியூஹோப் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 24.5 லிட்டர் மதுபானம்பறிமுதல் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x