Published : 23 Jun 2021 03:13 AM
Last Updated : 23 Jun 2021 03:13 AM

கண்ணமங்கலம் அருகே கிணற்றில் வீசி - 2 குழந்தைகளை கொன்ற தாய் கைது :

திருவண்ணாமலை

கண்ணமங்கலம் அருகே குடும்பத் தகராறு காரணமாக 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தாயை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி அருள்ராஜ். இவரது மனைவி புஷ்பலதா(28). இவர்களுக்கு 2 வயதில் சர்வேஷ் என்ற மகனும், ஒரு வயதில் சஞ்சனா என்ற மகளும் உள்ளனர்.

தம்பதியிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவர்களுக்குள் நேற்று முன் தினம் இரவு தகராறு அதிகரித்துள்ளது.

இதனால், மனவேதனை அடைந்த புஷ்பலதா, தனது மகன் மற்றும் மகளை அழைத்துக் கொண்டு, வீட்டை விட்டு நேற்று காலை வெளியேறினார்.

பின்னர் அவர், வீட்டின் அருகே தங்களுக்கு சொந்தமாக விவசாய நிலத்தில் உள்ள தரைக் கிணற்றில் மகன் மற்றும் மகளை வீசிவிட்டு தானும் குதித்துள்ளார்.

பின்னர் அவர் கூச்சலிட்டதால், கிணற்றில் குதித்து 3 பேரையும் மீட்கும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனர். புஷ்பலதா முதலில் மீட்கப்பட்டு மேலே கொண்டு வரப்பட்டார்.

மேலும், குழந்தைகளையும் தேடும் பணியை தொடர்ந்தனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு 2 குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

இதையறிந்த கண்ணமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று 2 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்ததற்காக புஷ்பலதாவை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x