Published : 22 Jun 2021 03:13 AM
Last Updated : 22 Jun 2021 03:13 AM

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை - 1,006 டன் திரவ ஆக்சிஜன் 23 மாவட்டங்களுக்கு விநியோகம் :

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து இதுவரை மருத்துவ பயன்பாட்டுக்காக 1,006 டன் திரவ ஆக்சிஜன் 23 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் கடந்த மே மாதம் 12-ம் தேதி இரவு மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. தொழில் நுட்பக்கோளாறால் சில நாட்கள் தடைபட்ட நிலையில் மே 19-ம் தேதி முதல் முழு வீச்சில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக வாயு நிலை யிலான மருத்துவ பயன்பாட்டு ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைத்து விநியோகம் செய்யும் பணியையும் ஸ்டெர்லைட் நிறுவனம் இம்மாதம் 5-ம் தேதி தொடங்கியது. இங்கு உற்பத்தியாகும் திரவ மற்றும் வாயு ஆக்சிஜன் தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் 1,000 மெட்ரிக் டன்னை நேற்று கடந்தது. இதனை முன்னிட்டு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு 16.5 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை 1,006 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனை தவிர இதுவரை 712 வாயு நிலையிலான ஆக்சிஜன் சிலிண்டர்கள் (7.12 டன்) விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

இங்கிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், நாமக்கல், தருமபுரி, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய 23 மாவட்டங்களுக்கு மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x