கடல் வழியாக ஊடுருவியது எப்படி? - மண்டபம் அருகே இலங்கை தமிழர்களிடம் மங்களூரு தனிப்படையினர் விசாரணை :

கடல் வழியாக ஊடுருவியது எப்படி? -  மண்டபம் அருகே இலங்கை தமிழர்களிடம் மங்களூரு தனிப்படையினர் விசாரணை :
Updated on
1 min read

இலங்கையில் இருந்து கள்ளப் படகில் மண்டபம் அருகே ஊடுருவிய இலங்கை தமிழர்கள் குறித்து மங்களூரு தனிப்படை போலீஸார் மண்டபத்தில் விசாரணை செய்தனர்.

இலங்கையில் இருந்து கள்ளப் படகில் தமிழகத்தில் ஊடுருவி கனடா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அனுமதியின்றி செல்வதற்காக கர்நாடக மாநிலம் மங்களூருவில் பதுங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த 38 தமிழர்களை மங்களூரு போலீஸார் ஒரு வாரத்துக்கு முன்பு கைது செய்தனர். இதேபோல் மதுரையில் பதுங்கியிருந்த 23 இலங்கைத் தமிழர்களை மதுரை கியூ பிரிவு போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.

மங்களூருவில் கைதான 38 பேரில் 14 பேர் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியில் ஊடுருவி மங்களூரு சென்றுள் ளனர்.

இவர்களை கள்ளப் படகில் அழைத்து வரவும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மரைக் காயர்பட்டி னத்தைச் சேர்ந்த அப்துல் முகைதீன்(43), ரசூல்(29), சதாம்(31) ஆகிய 3 பேரையும் சென்னை கியூ பிரிவு போலீஸார் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய முக்கிய நபரான இம்ரான்கான் உள்ளிட்ட இருவரை தேடி வரு கின்றனர்.

இந்நிலையில் மண்டபம் வந்த 14 பேரில் 4 பேரை இன்ஸ்பெக்டர் லோகேஷ் தலைமையிலான 8 பேர் கொண்ட மங்களூரு தனிப்படை போலீஸார் நேற்று மண்டபத்துக்கு அழைத்து வந்தனர். மங்களூரு தனிப் படையினர் 4 பேரையும் அவர்கள் வந்திறங்கிய வேதாளை கடற்கரை பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இவர்கள் மரைக்காயர் பட்டினத்தில் தங்கியிருக்க அடைக் கலம் கொடுத்த இம்ரான்கானின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் விசாரணை நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in