Published : 20 Jun 2021 03:13 AM
Last Updated : 20 Jun 2021 03:13 AM

மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராடி - உயிர்நீத்த விவசாயிகளின் நினைவு தினம் அனுசரிப்பு :

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் கடந்த 1970-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி மின்கட்டண உயர்வுக்குஎதிராக அறவழியில் போராடி, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாரப்பன், ராமசாமி, ஆயிக்கவுண்டர் ஆகியோருக்கு, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

பொங்கலூர் ஒன்றியம் புத்தரச்சல் பேருந்து நிறுத்தத்தில் 3 பேரின் உருவப்படத்துக்கு மலர் தூவி, 51-ம் ஆண்டு நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது.

அப்போது உயிரைக் கொடுத்து பெற்ற இலவச மின்சார உரிமையை எந்நாளும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என விவசாயிகள் உறுதிமொழி ஏற்றனர். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவர் என்.எஸ்.பி. வெற்றி, ராசு, தங்கவேல், ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

இதேபோல தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பெருமாநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு, அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்குஒன்றியத் தலைவர் கே.ரங்கசாமி தலைமை வகித்தார். வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.அப்புசாமி, சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் கருப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். விவசாயசங்கக்கொடியை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் ஏற்றி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x