Published : 20 Jun 2021 03:14 AM
Last Updated : 20 Jun 2021 03:14 AM

ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் - ராமேசுவரம் கோயிலில் விபீஷணர் பட்டாபிஷேகம் : பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்தது

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற விபீஷணர் பட்டாபிஷேகம்.

ராமேசுவரம்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று விபீஷணர் பட்டாபிஷேக வைபவம் நடந்தது. கரோனா ஊரடங்கால் பக்தர்கள் பங்கேற் பின்றி இவ்விழா நடைபெற்றது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலின் வரலாற்றைச் சித்தரிக்கும் விழாவான ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா ஆண்டு தோறும் 3 நாட்கள் கொண் டாடப்படுகிறது. கோதண்டராமர் கோயிலில் இத்திருவிழா நடப்பது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா முதல் அலை காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் விபீஷணர் பட்டாபிஷேக விழா நடைபெறவில்லை.

இந்நிலையில் கரோனா இரண்டாவது அலை மற்றும் ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு கோதண்டராமர் கோயிலுக்குப் பதிலாக ராமநாத சுவாமி கோயில் வளாகத்தில் இவ்விழா நடைபெற்றது.

ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவின் முதல் நாளான கடந்த 18-ம் தேதி இரவு ராவண சம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்லக்கில் எழுந்தருளிய ராமர், ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் பின் ராமருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

அதைத்தொடர்ந்து விபீஷணர் பட்டாபிஷேக வைபவம் நேற்று மாலை நடந்தது. ராமர், சீதா, லட்சுமணன் எழுந்தருளினர். அதன் பின் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்விக்கும் நிகழ்வை தலைமை குருக்கள் உதயகுமார் நடத்தினார். ஊரடங்கு காரணமாக இந்த வைபவத்தைக் காண பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கோயில் இணை ஆணையர் பழனிகுமார் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் மூன்றாவது நாளான இன்று காலை ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை வைபவம் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x