Published : 20 Jun 2021 03:14 AM
Last Updated : 20 Jun 2021 03:14 AM

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா முயற்சி : முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் குற்றச்சாட்டு

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் அதிமுக கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாவட்டச் செயலாளருமான நத்தம் ஆர்.விசுவநாதன் தலைமை வகித்தார். தேன்மொழி எம்.எல்.ஏ., நத்தம் ஒன்றியத் தலைவர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், சசிகலாவிடம் தொலைபேசியில் பேசுவோரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் நத்தம் விசுவநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுகவைப் பொறுத்தவரை இரட்டை குழல் துப்பாக்கி போன்று இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். உள்ளனர். கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்திச் செல்கின்றனர். சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்வி கவுரவமானது. இன்னும் சொல்லப்போனால் வெற்றிகரமான தோல்விதான்.

சசிகலா கட்சியின் உறுப்பினரே கிடையாது. அதிமுகவில் பிரச்சினையை ஏற்படுத்த அவர் முயற்சி செய்கிறார். இவரை ஜெயலலிதாவே நீக்கினார். நம்பிக்கையான உதவியாளர் என்று சசிகலாவை, ஜெயலலிதா நம்பினார். ஆனால் துரோகம்தான் செய்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் என்ன நடந்தது என்று சசிகலாவுக்கு மட்டும்தான் தெரியும். ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதற்கான ஆணையம் அமைக்கப்பட் டுள்ளது. சசிகலா தன்னை தாய் என்று கூறிக் கொள்கிறார். அதிமு கவைப் பொறுத்தவரை அவர் அப்படியல்ல. இந்த சலசலப்புக்கு அதிமுகவினர் அஞ்சமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x