Published : 20 Jun 2021 03:14 AM
Last Updated : 20 Jun 2021 03:14 AM

தளியில் வாகனம் கவிழ்ந்து எஸ்.எஸ்.ஐ உயிரிழப்பு :

ஓசூர்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் எஸ்.சிவாஜி (58). 1988-ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த சிவாஜி, தற்போது தேன்கனிக்கோட்டை அருகே தளி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு தளியில் இருந்து ஓசூருக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.

தொட்ட உப்பனூர் ஏரிக்கரை வளைவு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து வலது புறமுள்ள 20 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்தது. விபத்து குறித்து அவ்வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தளி போலீஸார் விரைந்து சென்று, பள்ளத்தில் விழுந்து, பலத்த காயமடைந்த நிலையில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிவாஜியை மீட்டு தளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு எஸ்.எஸ்.ஐ. சிவாஜியின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். அதையடுத்து அவரது உடல் தேன்கனிக் கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊரான காரிமங்கலத்தில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x