Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM

கரோனா இல்லை என்ற நிலையை தமிழகத்தில் உருவாக்குவோம் : செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நம்பிக்கை

திருப்பூர்

கரோனா தொற்று இல்லை என்றநிலையை விரைவில் உருவாக்குவோம் என்று, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகள் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் வினீத், கோவை மண்டல காவல்துறை தலைவர் ஆர்.சுதாகர், துணைத் தலைவர் எம்.எஸ்.முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் ஆகியோர் முன்னிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசுமருத்துவமனைகள் பயன்பாட்டுக்கு நேற்று வழங்கப்பட்டன.

இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, பல்வேறு தனியார்அமைப்புகள் மூலமாக ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 30 நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவியது. தற்போது தேவைக்கு அதிகமாகவும், போதிய அளவிலும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் கையிருப்பில் உள்ளன.

தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள இந்த செறிவூட்டிகள், நெதர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்டவை. இந்த அதிநவீன ஆக்சிஜன் செறிவூட்டிகள், நோயாளிகளுக்கு நிமிடத்துக்கு 5 லிட்டர் ஆக்சிஜனை வழங்கும் திறன் கொண்டது.

ஒரே சமயத்தில் 2 நோயாளி களுக்கு இவற்றை பயன்படுத்தலாம். திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

விரைவில், கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக, திருப்பூர் உருவாவதைப்போல தமிழகத்திலும் தொற்று இல்லை என்ற நிலையை உருவாக்குவோம். கரோனா தடுப்பு நடவடிக்கை களில், பொதுமக்களும் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, கோட்டாட்சியர் ஜெகநாதன் மற்றும் மாவட்ட போலீஸார் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x