

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் கால்நடை காப்பீடு திட்டமானது, கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை இறப்பதினால் ஏற்படும் நஷ்டங்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-2021-ம் ஆண்டுக்கான கால்நடை காப்பீடு திட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் 1,500 கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்போர் தங்களிடம் உள்ள கால்நடைகளை ஓராண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு நபர் 5 கால்நடை இனங்களுக்கு மட்டுமே காப்பீடு செய்ய முடியும். கறவைப்பசு, எருமை இனங்கள் இரண்டரை வயது முதல் 8 வயதுக்குள் இருக்க வேண்டும். வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் 1 முதல் 3 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் கால்நடைகளுக் குரிய காப்பீடு பிரிமியத்தில் 50 சதவீதம் மானியத்தில் காப்பீடு செய்து பயனடையலாம். அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் ஆய்வு செய்து சான்று வழங்கிய பின், அதன் அடிப்படை யில் கால்நடைகளுக்கு காப்பீடு செய்யப்படும். காப்பீடு செய்யப் பட்ட கால்நடைகளுக்கு காது வில்லைகள் பொருத்தப்படும்.
காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகள் இறக்க நேரிட்டால், காதுவில்லை, கால்நடை உதவி மருத்துவரால் நேரில் ஆய்வு செய்து வழங்கப்படும் கால்நடைகளின் இறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை காப்பீடு நிறுவனத்தில் அளித்தால், இழப்பீடு தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்போர் தங்களிடம் உள்ள கால்நடைகளை ஓராண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.