Published : 19 Jun 2021 03:15 AM
Last Updated : 19 Jun 2021 03:15 AM

சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே - வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை :

சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நகரம் வந்தவாசி சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளதால் வேலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து வேளாண் பொருட்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் வந்து செல்கின்றன. அப்பகுதியில், மதுபானக் கடை உள்ளதால், மதுப்பிரியர்களின் வருகையும் அதிகம்.

மேலும், வந்தவாசி நோக்கி செல்பவர்களும் அதிகளவில் பயணிக்கின்றனர். இதனால், அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் கூடுதலாக உள்ளது. மேலும், அதிவேகத்தில் வாகனங்கள் இயக்கப்படுவதால், விபத்துகளும் தொடர்ந்து அதிகரிக்கிறது. இதில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே சாலையை கடக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இதனால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையிடம் பொதுமக்கள் மனு அளித்தும் பலனில்லை. விபத்துகளை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x