Published : 16 Jun 2021 03:12 AM
Last Updated : 16 Jun 2021 03:12 AM

தடுப்பூசி செலுத்தும் பணிகளில் அரசியல் கட்சியினர் தலையீடு : மருத்துவர்கள், பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருப்பூர்

தடுப்பூசி செலுத்தும் பணிகளில் அரசியல் கட்சியினரின் தலையீடுஅதிகமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாநகர் பொதுமக்கள் கூறும்போது, "திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் இடங்கள் குறித்து வெளிப்படையான தகவல் இல்லை.சிலர் அளிக்கும் தகவலைகொண்டு, அந்த பகுதியில் அதிகாலை முதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில்காத்திருக்கிறோம். அதிலும் வயதானவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் உள்ளனர். ஆனால், திடீரென ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் அரசியல் கட்சியினர், அவர்கள் அழைத்து வரும் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தகூறுகிறார்கள். இது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், அதிருப்தி யையும் ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல, சில இடங்களில் டோக்கன்களையும் மொத்தமாக அரசியல் கட்சியினர் பெற்றுச் செல்லும் நிலை உள்ளது. இது குறித்து கேட்டால் வாக்குவாதம் ஏற்படுகிறது. வரிசையில் நிற்கும் எங்களை சமரசம் செய்துவிட்டு, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துகிறார்கள். மாவட்ட நிர்வாகம்மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மூலமாக வெளிப்படையாக தடுப்பூசி செலுத்துவதற்கான டோக்கன் வழங்க வேண்டும். வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை கண்காணித்து, கட்சி பாகுபாடின்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

ஆடியோ வைரல்

திருப்பூர் ஆண்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணிபுரியும் மருத்துவரிடம், தடுப்பூசி செலுத்தும் டோக்கன் வழங்குமாறு கட்சி பிரமுகர் ஒருவர் அலைபேசியில் தொந்தரவு செய்துள்ளார். மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என பலரும் விடுப்பின்றி வேலைசெய்கிறோம். நீங்கள் இப்படி செய்யலாமா? சுகாதாரத் துறை அமைச்சருக்கு புகார் அளிக்கிறேன் என மருத்துவர் தெரிவிக்கவே, எதிரில் பேசும் நபர் முதல்வருக்கே புகார் கொடு என்கிறார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x