Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM

ரேஷன் கடைகளில் காலாவதியான பாமாயில் விற்கப்படுவதாக புகார் :

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் காலாவதியான பாமாயில் விநியோகிக்கப்படுவதாக படுக தேச பார்ட்டி புகார் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் மஞ்சை வி.மோகன் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான நியாயவிலைக் கடைகளில் கடந்த ஓரிரு நாட்களாகத்தான் பாமாயில் வழங்கப்படுகிறது. இதில், உதகையில் டேவிஸ்டேல் பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையில் இரண்டு தினங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட பாமாயில் காலாவதியானதாகும்.

இதுதொடர்பாக கேட்டதற்குதங்களுக்கு மட்டுமின்றி அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் ஜூன் மாத விநியோகத்துக்காக வழங்கப்பட்ட பாமாயில் தான் இது எனவும், தங்களால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் தெரி வித்துவிட்டனர்.

இதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் விநியோகிக்கப்பட்ட பாமாயிலும் காலாவதியானவை என அப்பகுதி மக்கள் தெரிவித் துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது விநியோகிக்கப்படும் பாமாயில், 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி பேக்கிங் செய்யப்பட்டவை. இவை பொட்டலமிடப்பட்ட 3 மாதங்களுக்குள் பயன்படுத்துவது நல்லது என, அந்த பாக்கெட்டிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலாவதியாகி 3 மாதங்களாகியும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதை வாங்கி பயன்படுத்தும் பொதுமக்களின் உடல்நலம் வெகுவாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து நியாயவிலைக் கடைகளையே நம்பியுள்ள பொதுமக்களுக்கு, காலாவதியான உணவுபொருட்கள் விநியோகிப்பதை தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x