Published : 13 Jun 2021 03:13 AM
Last Updated : 13 Jun 2021 03:13 AM

ரூ.3.60 லட்சம் கேட்டு இறந்தவர் உடலைத் தர மறுத்த - காரைக்குடி தனியார் மருத்துவமனை முற்றுகை :

காரைக்குடியில் ரூ.3.60 லட்சம் கேட்டு கரோனாவால் இறந்தவர் உடலைத் தர மறுத்த தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் வேணு கோபால் (70). கரோனாவால் பாதிக்கப்பட்ட அவரை, கடந்த மே 20-ம் தேதி அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். முதற்கட்டமாக, சிகிச்சைக்கு ரூ.3.50 லட்சம் செலுத்தினர். இந்நிலையில் நேற்று காலை வேணுகோபால் இறந்தார். இதையடுத்து மீதமுள்ள தொகை ரூ.3.60 லட்சத்தை செலுத்தினால் தான் உடலைத் தருவோம் என மருத்துவமனை நிர்வாகம் கெடுபிடி செய்ததாகக் கூறப்படுகிறது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக பணம் கேட்பதாகக் கூறி, வேணுகோபாலின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு வந்த காரைக்குடி வடக்கு இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் தலைமையிலான போலீஸார் இறந்தவரின் உறவினர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இறுதியில் ஒரு குறிப்பிட்டத் தொகையை செலுத்திய பிறகே மருத்துவமனை நிர்வாகம் வேணுகோபால் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தது.

இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், மருத்துவமனை நிர்வாகத்தினர் கூடுதல் கட்டணம் செலுத்தக் கூறினர். மேலும் மருத்துவக் காப்பீட்டு திட்டம் குறித்து கேட்டும் முறையாக பதில் அளிக்கவில்லை. போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதால் ரூ.1 லட்சம் வாங்கிக் கொண்டு உடலை ஒப்படைத்தனர் என்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கருத்து கேட்க முயன்றபோது பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x