Published : 13 Jun 2021 03:14 AM
Last Updated : 13 Jun 2021 03:14 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - சிறப்பு முகாம்களில் ஒரே நாளில் காலியான தடுப்பூசி : பொதுமக்கள் காத்திருந்து கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்ததால் ஒரே நாளில் தடுப்பூசி இருப்பு காலியானது. தற்போது, கையிருப்பில் குறைந்த எண்ணிக்கை தடுப்பூசி இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா முதல் அலை பாதிப்பைவிட இரண்டாம் அலையின் பாதிப்பு அதிகமாக இருப்பதுடன் உயிரிழப்பும் அதிகளவில் உள்ளது. குறிப்பாக, தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் முதல் அலையில் ஓராண்டில் எட்டிய எண்ணிக்கையை இரண்டாம் அலையில் இரண்டே மாதங்களில் கரோனா தொற்று எட்டியது. தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்ததால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என கூறப்பட்டது.

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆரம்பத்தில் ஆர்வம் குறைவாக இருந்தாலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் கட்டத் தொடங்கினர். குறிப்பாக, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியதும் பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகளவில் ஏற்பட்டது. இதனால், தடுப்பூசி கையிருப்பில் தட்டுப்பாடு இருந்தது. தடுப்பூசி விநியோகத்திலும் தட்டுப் பாடு இருந்ததால் தமிழகத்தில் வரப்பெற்ற தடுப்பூசிகளைக் கொண்டு 5 நாட்களுக்குப் பிறகு நேற்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை மற்றும் சிறப்பு முகாம்கள் என 23 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நேற்று நடைபெற்றது. கையிருப்பில் இருந்த 3,300 டோஸ் கோவிஷீல்டும், குறைந்த எண்ணிக்கையில் கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டது. மாலை நிலவரப்படி சுமார் 4,300 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

ஆட்சியர் ஆய்வு

வேலூரில் ஜெயின் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இணைந்து 13-வது நாளாக நடத்தி வரும் கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அவர் பேசும்போது, ‘‘மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனா இரண்டாவது அலையில் சிறிது உயிர்ச் சேதம் ஏற்பட்டது. நாளொன்றுக்கு 750 பேர் வரை சென்ற கரோனா தொற்று பாதிப்பு பொதுமக்களின் ஆதரவு, முன்களப் பணியாளர்களின் சிறப்பான சேவை, தன்னார்வலர்கள், தொண்டுநிறுவனங்களின் தடுப்பூசி சேவை ஆகியவற்றால் மூன்றில் இரண்டு பங்காக தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.

வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கரோனா 3-ம் அலை பரவுவதற்கான வாய்ப்புள்ளது என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். 3-வது அலையிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரும் கட்டாயமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு வட்டாரத்துக்கு 10 முகாம்கள் என 6 வட்டாரங்களில் சுமார் 60 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. நேற்று காலை நிலவரப்படி கையிருப்பில் 8,500 டோஸ் கோவிஷீல்ட், 750 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி இருந்தது. ஆனால், நேற்று காலை முகாம் தொடங்கியதில் இருந்து அனைத்து முகாம்களிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்த துடன் நீண்ட நேரம் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஏறக்குறைய 9,000 பேர் நேற்று ஒரே நாளில் தடுப்பூசி போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கையிருப்பில் 7,800 டோஸ் கோவி ஷீல்ட், 100 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி இருந்தது. மாவட்டத்திலும் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி காலியானதாக கூறப் படுகிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் கையிருப்பில் இருந்த தடுப்பூசிகள் அனைத்தும் காலி யானதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x