Published : 12 Jun 2021 07:01 AM
Last Updated : 12 Jun 2021 07:01 AM

‘திருப்பூர் மாவட்டத்துக்கு 2500 டோஸ் கோவாக்சின் ஒதுக்கீடு’ :

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்துக்கு 2500 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி வந்துள்ளதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.முன்னதாக, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது பல்வேறு கட்டங்களாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தடுப்பூசி வந்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட 9 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் என பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும், தடுப்பூசி செலுத்த பலரும் ஆர்வம் காட்டி வந்தனர். இதற்கிடையே பலரும் தடுப்பூசி செலுத்தியதால், மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டது. சில இடங் களில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்துக்கு மேலும் 2500 டோஸ் தடுப்பூசி நேற்று வந்தது.

இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, "தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், சென்னையில் இருந்து சுகாதாரத் துறை மூலமாக திருப்பூர் மாவட்டத்துக்கு 2,500 டோஸ் கோவாக்சின்வந்துள்ளது. இவை, அரசு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும். பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி கரோனா தடுப்பூசி வழங்கப்படும். இந்த தடுப்பூசி முடியும் தருவாயில் கூடுதலாக கேட்டு பெறப்படும். இதனால், பொதுமக்கள் அச்சமின்றி இருக்கலாம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x