Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM
திருப்பூர்: தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், செயலாளர் ஆர்.குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "திருப்பூர் மாவட்டத்தில் ஆனி பட்டத்துக்கான வெங்காய நடவுப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதற்காக நிலத்தை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வயலுக்கு அடி உரமாக இட வேண்டிய டிஏபி உரத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களிலும், தனியார் உர விற்பனைக் கடைகளிலும் டிஏபி உரம் இருப்பு இல்லை என்று கூறப்படுகிறது. பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரித்தும் உரம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்காயம் நடவுக்கான விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. விரைந்து உரம் கிடைத்தால்தான், ஆனி முதல் வாரத்தில் வெங்காயம் நடவு செய்ய முடியும். தற்போது டிஏபி உரம் அரசு விலை மூட்டை ரூ.1200. முன்னர், ரூ.1900-க்கு விற்கலாம் என எண்ணி கொள்முதல் செய்த தனியார் உர விற்பனையாளர்கள், இருப்பு இல்லை என்று விவசாயிகளிடம் கூறி, கள்ளச்சந்தையில் விற்று வருவதாக தெரிய வருகிறது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு, சீராக விவசாயப் பணிகள் நடைபெறும் வகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தேவைக்கான டிஏபி உரம் வழங்க வேண்டும். பதுக்கலையும், கள்ளச்சந்தையில் விற்பனையையும் தடுத்து, தனியார் உர விற்பனை நிலையங்களிலுள்ள இருப்பு குறித்த விவரங்களை வெளிப்படையாக பத்திரிகைகள் வாயிலாக அறிவிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT