Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை - மாணவர் சேர்க்கைக்கு ஒரு வாரத்தில் வழிகாட்டு நெறிமுறை : பிளஸ் 1 சேர்க்கையில் நுழைவுத்தேர்வுக்கு பரிந்துரை

புதுச்சேரி

புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கைக்கு ஒரு வாரத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ளது. போட்டி அதிகமுள்ள பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்த அரசுக்கு கல்வித்துறை பரிந்துரைத்துள்ளது.

தனி கல்வி வாரியம் இல்லா ததால் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்கள் தமிழக பாடத் திட்டத்தையும், மாகே கேரளா பாடத்திட்டத்தையும், ஏனாம் ஆந்திரா பாடத்திட்டத்தையும் பின் பற்றுகிறது.

கரோனா பரவலால் தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாண வர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர். இதை பின் பற்றி புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர். இதனால் பிளஸ் 1 சேர்க்கையை எதன் அடிப்படையில் நடத்துவது என பெரும் குழப்பம் நிலவுகிறது. அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை, பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு தலைமையில் காணொலியில் நடந்தது. கூட்டத்தில் இணை, துணை இயக்குநர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், பள்ளிக்கல்வி ஆய்வாளர்கள், முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் மாணவர் சேர்க்கை தொடர்பாக விரிவாக விவாதிக் கப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், “ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். இதன்படி மாணவர் சேர்க்கை நடத்தப்படும். போட்டி அதிகம் உள்ள பள்ளிகளில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை நடத்த அரசுக்கு கல்வித்துறை பரிந்துரைத்துள்ளது. அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவித்தபின், அதன்படி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். மாணவர்களுக்கு மதிய உணவுக்கான தொகையை கரோனா விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் உட்பட பல திட்டங்களில் கிடைத்த நிதியால் பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பை 3 மாதங்களில் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்கப்பட்டன” என்று குறிப்பிட்டனர்.

போட்டி அதிகம் உள்ள பள்ளிகளில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை நடத்த அரசுக்கு கல்வித்துறை பரிந்துரைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x