Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM

கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை : திருப்பத்தூர் மாவட்ட புதிய எஸ்பி சிபி சக்கரவர்த்தி தகவல்

திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாக சிபி சக்கரவர்த்தி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த டாக்டர். விஜயகுமார் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, சைபர் செல் சிஐடி பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சிபி சக்கரவர்த்தி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமித்து அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகரன் உத்தர விட்டார். இதைதொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி நேற்று பொறுப்புக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் எஸ்பி. சிபி சக்கரவர்த்தி கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பங்களிப்புடன் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமரா பொறுத்த ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதை விரைவில் செயல்படுத்தப்படும்.

காவல் நிலையங்களில் பொது மக்களிடம் இருந்து வரும் புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி முன்னுரிமை அடிப்படையில் வழக்கை துரிதப்படுத்தி தீர்வு காணப்படும். கரோனா ஊடரங்கு காலம் என்பதால் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் கனிவுடன் நடந்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராமம் தோறும் ‘கிராம கண்காணிப்பு குழு’ ஏற்கெனவே அமலில் உள்ளது. இக்குழு தொடர்ந்து செயல்படும். தற்போது கரோனா பேரிடர் காலம் என்பதால் கரோனா பரவலை தடுப்பது முதல் வேலையாக உள்ளது. திருப்பத் தூரில் தளர்வுகளற்ற ஊரடங்கில் சமூக இடைவெளியை யாரும் பின்பற்றுவதாக தெரியவில்லை. எங்கு பார்த்தாலும் கூட்டம், கூட்டமாக மக்கள் சென்று வருகின்றனர்.

எனவே, பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு வழங்க காவல் துறை நடவடிக்கை எடுக்கும். கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர தேவை யான நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு காக்கப்படும். குற்றச்செயல்கள் தடுக்கப்படும்’’ என்றார்.

திருப்பத்தூர் மாவட்டத்தின் 2-வது எஸ்பியாக பொறுப்பேற் றுள்ள சிபி சக்கரவர்த்திக்கு துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x