Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM
கிராமப்புற பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அச்சம் அடைய வேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ரவளிபிரியா பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் சார்பில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகன் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி வரவேற்றார். மாவட்ட எஸ்.பி. ரவளிபிரியா நிகழ்ச்சியில் பங்கேற்று அம்மையநாயக்கனூர், கொடைரோடு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள், ஆதரவற்றோர் என 500-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, காய்கறி, மளிகைப்பொருட்களை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: கிராமப்புறங்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெண்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி குறித்து யாரும் அச்சம் அடைய வேண்டாம்.
அதற்கு நானே உதாரணமாக நிற்கிறேன். எனக்கு குழந்தை பிறந்து 5 மாதங்கள்தான் ஆகிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசி போட்டுக் கொண்டேன். எனவே வயதானவர்கள், பெண்கள் என அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.
நிகழ்ச்சியில் அம்மைய நாயக்கனூர் வர்த்தக சங்கத் தலைவர் ராஜபார்ட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT