Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

மூல வைகையில் தொடர்ந்து நீர்வரத்து : குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்துவரும் மழையால் மூலவைகையில் தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. (இடம்:கண்டமனூர்) படம்: என். கணேஷ்ராஜ்

கண்டமனூர்

தேனி மாவட்டம், வருசநாடு அருகே வெள்ளிமலை, அரசரடி வனப்பகுதியில் இருந்து மூல வைகை ஆறு உருவாகிறது. இந்த ஆறு தும்மக்குண்டு, முறுக்கோடை, சிங்கராஜபுரம், தங்கம்மாள்புரம், நரியூத்து, மயிலாடும்பாறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைக் கடந்து வைகை அணை வரை செல்கிறது.

இந்த ஆற்றின் மூலம் கடமலை - மயிலாடும்பாறை ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

இதற்காக ஆற்றில் உறை கிணறு, கரைகளில் ஆழ்குழாய் அமைத்து நீர் பெறப்படுகிறது. பருவமழை பெய்யும்போது மட்டுமே மூலவைகையில் நீரோட்டம் இருக்கும். இதனால் கோடையில் இக்கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். ஆனால் இந்த ஆண்டு கோடைமழை, பருவமழை, புயல் மழை என்று தொடர்ந்து மழை பெய்வதால் மூலவைகையில் தொடர்ந்து நீரோட்டம் உள்ளது.

இதனால் மயிலாடும்பாறை ஒன்றிய கிராமங்களின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில் பல ஆண்டுகளாக கோடையில் மூலவைகை ஆறு வறண்டுதான் காணப்படும். ஆனால், இந்த ஆண்டு நீர்வரத்து உள்ளதால் குடிநீர் தேவை மட்டு மல்லாது பாசனத்துக்கும் தண்ணீர் உள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x