Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

கரோனா காலத்தில் பறிமுதல் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் : வங்கியாளர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வங்கியாளர்களுக்கான கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி பேசினார்.

தருமபுரி

கரோனா காலத்தில் பறிமுதல் நடவடிக்கை களை தவிர்க்க வேண்டுமென தருமபுரியில் நடந்த வங்கியாளர்களுக்கான கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தருமபுரி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தலைமை வகித்தார். கூட்டத்தில் அவர் பேசியது:

தருமபுரி வேளாண்மை மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். எனவே, மகளிர் சுய உதவிக் குழு கடன் உதவிகள், குறு, சிறு, நடுத்தர தொழில் கடன்கள், தனிநபர் கடன்கள், கல்விக் கடன் உதவிகள் ஆகியவற்றுக்கு வங்கியாளர்கள் அதிக முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தனிநபர் புளி பதப்படுத்துதல், தேன் வளர்த்தல் உள்ளிட்ட சுய தொழில் மேற்கொள்ள வங்கியாளர்கள் கடன் உதவிகளை விரைவாக வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கி, நகர, மத்திய கூட்டுறவு வங்கிகள் மகளிர்குழு கடனுதவி, கல்விக் கடன், தனிநபர் கடன், வேலை வாய்ப்பு வழங்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் கடன் உதவிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தற்போது கரோனா காலம் என்பதால் பறிமுதல் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.

2020-21-ம் நிதியாண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நேரடி கடனாக ரூ.792.31 கோடியும், கரோனா தொற்று கால சிறப்பு கடனாக ரூ.66.98 கோடியும் என மொத்தம் ரூ.859.29 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் வங்கியாளர்கள் வங்கிக் கடன் வழங்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு கூட்டமைப்பு பெருங்கடன் அதிக அளவில் வழங்கி குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டும். வங்கி நடவடிக்கைகள் அனைத்தும் கரோனா விதிமுறைகளை பின்பற்றியே நடந்திட வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ராமதாஸ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், இந்தியன் வங்கி பயிற்சி நிறுவன இயக்குநர் அரவிந்த், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் பழனிமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x