

காவேரிப்பட்டணத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டு, விதைப்பந்துகள் வீசப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பெண்ணார் ஜேசிஸ் அமைப்பின் சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு, விதைப்பந்துகள் வீசப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு, காவேரிப் பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன், திம்மாபுரம் அரசு தோட்டக்கலை அலுவலர் சுகதேவன் ஆகியோர் தலைமை வகித்தனர். பெண்ணார் ஜேசிஸ் அமைப்பு நிர்வாகிகள் மருத்துவர் சுதாகர் சாகர், ரஞ்சித், பாலமுருகன், சங்கர், வேடியப்பன், துணைத்தலைவர் ராமச்சந்திரன், இணைச்செயலாளர் சமரசம், மகளிர் பிரிவு சத்தியகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் சக்திவேல் அனைவரையும் வரவேற்றார்.
இதில், காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், புங்கன், விளாம், நாவல், வேம்பு மற்றும் இலந்தை போன்ற பல்வேறு பயனுள்ள மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்னர் மரக்கன்றுகள் நடுதலின் முக்கியத்துவம் பற்றியும், பசுமையை உருவாக்குதலின் தேவைகள் குறித்தும் அரசு அலுவலர்கள் விளக்கமாக எடுத்துக் கூறினர்.
தொடர்ந்து காவேரிப்பட்டணம் சுற்றியுள்ள பகுதிகளில் விதைப் பந்துகள் வீசப்பட்டன.