Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM

பட்டுக்கோட்டையில் ஊழியர்களை உள்ளே வைத்து காய்கறி கடைக்கு சீல் வைப்பு :

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பெருமாள்கோவில் பகுதியில் ஜூன் 5-ம் தேதி இளைஞர்கள் கூட்டமாக கிரிக்கெட் விளையாடினர். போலீஸார் அங்கு சென்று இளைஞர்களை எச்சரித்து, அவர்கள் வந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இதில், பட்டுக்கோட்டை நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றும் ஆரோக்கியம் என்பவரது மகனின் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. கரோனா தடுப்பு பணியில் தன்னார்வலராக பணியாற்றும் பக்ருதீன் என்பவர் தான் போலீஸாரிடம் கூறி, தனது மகனின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்யக் கூறியுள்ளார் எனக் கருதிய ஆரோக்கியம், பக்ருதீனை தொலைபேசியில் தொடர்கொண்டு கடுமையாக பேசியுள்ளார்.

இந்நிலையில், ஆரோக்கியம் நேற்று முன்தினம், பக்ருதீனின் சகோதரர் நாகூர் மீரான் நடத்தி வரும் மொத்த காய்கறி கடை, ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி, கடையில் வேலை பார்த்தவர்களை உள்ளேயே வைத்து கடையை பூட்டி, சீல் வைத்தார். இதைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தைக்கு பிறகு போலீஸார் உதவியுடன் கடை திறக்கப்பட்டு, ஊழியர்கள் வெளியே வந்தனர்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஆரோக்கியத்தின் செயலுக்கு காய்கறி வியாபாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பட்டுகோட்டை நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் கூறியபோது, “நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆரோக்கியம் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து, அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்மீது தவறு இருந்தால், துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x