ஊரடங்கில் கட்டுமான பொருட்கள் விலை உயர்வு  :  கட்டிட உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் பாதிப்பு

ஊரடங்கில் கட்டுமான பொருட்கள் விலை உயர்வு : கட்டிட உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் பாதிப்பு

Published on

தமிழகத்தில் கரோனா ஊரடங்கில் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் கட்டிட உரிமையாளர்கள், ஒப்பந்ததா ரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா ஊரடங்கில் கட்டுமானப் பணிகள் நடக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து வீடு, கடைகள் உள்ளிட்ட கட்டிடப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால், ஊரடங்கு காலத்தில் கட்டுமானப் பொருட்களின் விலையை நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. ரூ.430-க்கு விற்ற ஒரு மூட்டை சிமென்ட் ரூ.460-ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் ரூ.6 ஆயிரத்துக்கு விற்ற 100 கிலோ கம்பி, ரூ. 7 ஆயிரமாகவும், ரூ.8,500-க்கு விற்ற 3 யூனிட் ஜல்லி ரூ.9,500-ஆகவும், ரூ.23 ஆயிரத்துக்கு விற்ற 3 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட ஒரு லோடு செங்கல் ரூ. 28 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.

பெயிண்ட் விலையும் தரத்துக்கு ஏற்ப லிட்டருக்கு ரூ. 60 முதல் ரூ. 100 வரை அதிகரித்துள்ளது. திடீர் விலையேற்றத்தால் கட்டிட உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர் கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மானாமதுரை கட்டிட ஒப்பந்ததாரர் சரவணன் கூறியதாவது: ஊரடங்கை காரணம் காட்டி, கட்டுமானப் பொருள்களின் விலையை உயர்த்தி விட்டனர். இதனால் கட்டிட உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேவை குறைந்தநிலையில் கட்டுமானப் பொருட்களின் விலையை உயர்த்தி உள்ளனர். இதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in