

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் கிராமப்புறங்களில் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் காய்கறி, பழங்களின் தரம், விலை குறித்து தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் நாச்சிக்குப்பம் கிராமத்தில், பன்னப்பள்ளி உழவர் உற்பத்தியாளர் குழுவின் நடமாடும் காய்கறி வாகனத்தை மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் உமாராணி ஆய்வு செய்தார்.
அப்போது பொதுமக்களுக்கு தேவையான அளவு காய்கறிகள் உள்ளதா, காய்கறிகள் தரமாக உள்ளதா, விலைப்பட்டியல் உள்ளதா என்பதை ஆய்வு செய்தார். பின்னர், அதே பகுதியில் சக்கரலப்பா என்பவரது தள்ளுவண்டியை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், கரோனா ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பயன்படும் வகையில் உழவர் உற்பத்தியாளர் குழு வாகனங்கள் மற்றும் நடமாடும் காய்கறி வாகனங்கள் பயன்படுத்தி எவ்வித குறைபாடும் இல்லாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.
இதனை தொடர்ந்து, ஜீனூர் அரசு தோட்டக்கலை பண்ணையை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய பருவ காலத்தில் பழச்செடிகள் வழங்கும் பொருட்டு பழச்செடிகள் மற்றும் காய்கறி விதைகள் உற்பத்தி செய்ய அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது, தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் ராம்பிரசாத், உதவி இயக்குநர் அஜிலா மற்றும் களப்பணியாளர்கள் உடனிருந்தனர்.