Published : 05 Jun 2021 03:12 AM
Last Updated : 05 Jun 2021 03:12 AM

கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து இளைஞர் உயிரிழப்பு : உயிருடன் 4 தொழிலாளர்கள் மீட்பு

செங்கம் அருகே சாலையோர கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து இளைஞர் உயிரிழந்தார். மேலும், 4 தொழிலாளர்களுடன் உயிருடன் மீட்கப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்டமடுவு கிராமத்துக்கு செங்கல் ஏற்றிச் செல்ல டிராக்டர் நேற்று காலை வந்துள்ளது. ஊத்தங்கரை அடுத்த பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் விக்னேஷ் (24), டிராக்டரை ஓட்டி வந்தார். அவருடன், அதே பகுதியில் வசிக்கும் முனிரத்தினம் (23), குப்புசாமி (26), தம்பிதுரை (25), பிரதாப் (22) ஆகியோர் வந்தனர்.

கட்டமடுவு கிராமத்தில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்தது. சுமார் 20 அடி ஆழ கிணற்றில் தண்ணீர் நிறைந்திருந்தது. மேல்செங்கம் காவல்துறை மற்றும் செங்கம் தீயணைப்புத் துறையினர், மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முனிரத்தினம், குப்புசாமி, தம்பிதுரை மற்றும் பிரதாப் ஆகிய 4 பேரை உயிருடன் மீட்டனர். டிராக்டருக்கு அடியில் விக்னேஷ் சிக்கிக்கொண்டதால் அவரை மீட்க முடியவில்லை. பொக்லைன் இயந்திரம் வர வழைக்கப்பட்டு, டிராக்டரை வெளியே எடுத்தனர். இதையடுத்து 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு விக்னேஷ் உடல் மீட்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x