Published : 01 Jun 2021 03:12 AM
Last Updated : 01 Jun 2021 03:12 AM

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த - குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம் :

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு சலுகைகளை தமிழக அரசுஅறிவித்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, உயிரிழந்தவர்களின் குடும்பங்களை மாவட்டகுழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் தொடர்ச்சியாக அலைபேசியில் தொடர்புகொண்டு, அவர்களது விவரங்களை சேகரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே நரசிங்காபுரத்தில் தாய், தந்தையை இழந்த இரண்டு சகோதரர்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கூறும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால்இறந்தவர்களின் தகவல்களை பெற்றுள்ளோம். இதில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரங்களை சேகரித்து வருகிறோம்.மடத்துக்குளம் அருகே நரசிங்காபுரத்தில் ஒரு குடும்பம் அடையாளம்கண்டறியப்பட்டுள்ளது. நான்கு ஆண்டு களுக்கு முன்பு மாரடைப்பால் தந்தை உயிரிழந்த நிலையில், தற்போது கரோனா தொற்றால் தாயும் உயிரிழந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். தற்போது அக்கம்பக்கத்தினர் உதவி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை கேட்டறிந்துள்ளோம். தற்போது 19 வயது மூத்த சகோதரர் வேலைக்கு சென்று வந்துள்ளார். 15 வயது இளைய சகோதரர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இருவருக்கும் தேவையான உதவிகளை செய்ய உள்ளோம். கரோனா தொற்றால் தாய், தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் தகவல் அறியும் வகையில், சமூகப் பாதுகாப்புத் துறை சார்பில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x